Monday, February 1, 2010

ஏய்! அகண்ட தேசிய வாதியே?


தன்னலத்தில் இருந்து விரியும்
பொதுநலமே மெத்தச் சரி!

தன்னை விரும்பாதவனின் ;
தன்மொழி-இனத்தை விரும்பாதவனின்
பொதுநலத்தை
என்னென்று சொல்லி அழ ?

இயற்கையின் மொழியும் அதுவன்றோ?

ஒளி- ஒலி கூட
அருகில் அதிகமாகவும்
தூரம் செல்லச் செல்ல
அடர்த்தி குறைந்தும்தான்
மறைந்து போகிறது!

மனிதா நீ மட்டும் எவ்வாறு
தலைகீழாய்
இலக்கணம் வகுக்கிறாய்?

முதலில்
"அகில உலக சமத்துவமாம்" !!

அதன்பின்
"அகண்ட தேசியம்"-
"மொழிவாரி மாநிலம்"-
மாவட்ட நலம்,
வட்டம்,
பகுதி,
தெருக்கள்,

அதன் பின்

உன் வீடு
என்வீடு,
என்மக்கள்

அதன் பின் தானாம்
தன் நலம் சுய-நலம் !

ஆகா அருமை!

ஐயோ!
குழப்பத்தின்
ஒட்டுமொத்த குத்தகைக்காரனே!

ஏதோ ஒரு
தூர தேசத்து அம்மாவையும்
வேற்று மொழி நாட்டையும்
அங்கே ஒரு
ஊர் பேர் தெரியாத குடும்பத்தையும்
பற்றிப் பேசி
அவர்களை
பெரிதும் நேசிக்கும்
ஒரு நல்லவன் போல் காட்டி
'நோபிள்' பரிசு பெறத் துடிக்கிறாய்!

உன் சொந்தச்-சோதரர்கள்
துன்பம் காண்கில்லாய்!

உனது
இந்த நடிப்பையும் துடிப்பையும் கண்டு
உன் இனமும்
குடும்பமும்
உன் தாய்மொழி பேசும்
நல்லோர் உலகும்
உள்ளுக்குள்
எள்ளிச் சிரிப்பதை
உன் அறியாமை உள்ளம்
ஒருபோதும்
அறியாதோ நண்பனே ?


- மோகன் பால்கி

No comments:

Post a Comment