Monday, February 1, 2010

கூடார அடிமைகள்!


பகுத்து அறியாத அறிவு" என்பது

இன்னும் பயன்படுத்தாத

ஒரு வெறும் கருவியே ஆகும்!

எந்த ஒரு மனிதனும் பொருள்களும்

ஆராய்ச்சிக்கு உட்பட்டைவையே!

வெற்று நம்பிக்கைகளும்

வெறும் மூடக் கொள்கைகளும்

எவரையும் முன்னேற்றுவது இல்லை!

தன்னலமும் அதீத எதிர்பார்ப்பும் கொண்ட

சராசரி மக்கள்தான்

ஒரு சாதாரண மனிதனை

கடவுள் தன்மை கொண்டதொரு

பெரும் மகானாக சித்தரிக்க

பகீரத பிரயத்தனம் செய்கிறார்கள் !

காரணம் யாதெனில் ,

அது மறைமுகமாக

தனக்கே நன்மை செய்து கொள்வதற்கான

ஒரு 'தலைகீழ் முயற்சியே' எனலாம் !

அதாவது,

'இன்ன சாமியாரின் சீடன் நான்'

என்று பறை சாற்றுவதன் மூலம்

எதுவும் செய்யாமலேயே

ஒரு அங்கீகாரத்தை பெற்று விடும் சுயநலம்

அங்கு மறைந்து கிடக்கிறது!

மேலும்,

கூட்டம் அல்லது கூடாரம் என்பது

நல்லதொரு பொழுது போக்கையும்

ஒரு வித

பாதுகாப்பு உணர்ச்சியையும் தருவதனால்

மனிதர்கள்

தன்விருப்பத்துடனேயே

இதுபோன்ற

"பொய்மை கூடாரங்களைத்"

தேடியலைந்து நிரந்தரமான

அடிமையாகி விடுகிறார்கள் !


உண்மையோவெனில்,

வெட்டவெளியில்

ஒரு

"உண்மை-தேடியின்" வரவுக்காய்

தன்னந்தனியே அது

பொறுமையாய்க்

காத்திருக்கிறது!

-மோகன் பால்கி

No comments:

Post a Comment