Friday, September 2, 2016

தமிழன்தான் புலம் பெயர்ந்து சாகின்றான்!

சிவகாசி என்றவுடன் தீக்குச்சி குழந்தைஎலாம்
சின்னேரம் மனத்திரையில் நம்முள்ளே மின்னலிடும்!
சிவகாசி அம்மட்டோ! அச்சகத்தில் அரும்புரட்சி
சிருங்கார பட்டாசு உலகமெலாம் ஏற்றுமதி
ஆயிரம் கோடிகளில் புரளுகின்ற செலவாணி
அத்தனையும் உள்ளத்தில் சட்டென்று நினைவுவரும்!
நேற்றொரு நாள் மதியத்தில் மனமொடிந்தேன்
முதலிப் பட்டென்னும் ஊரொன்றில் வெடிவிபத்தாம்!

ஆறெட்டு அறைமுழுதும் நாலாறு ஆள்வீதம்
முன்னூரோ நானூறோ தொழிலாளர் பணிபுரிய
ஓரறையில் தவறுதலாய் தீப்பற்றி வியாபித்து
ஒவ்வொன்றாய் வெடிவெடித்து சிதறிப் புகைசூழ
பட்டாசுத் தொழிற்சாலை மண்மூடிப் போனதம்மா!
பெரும்சப்தம் தொடர்ந்துவர ஊர்மக்கள் சிலநூறும்
அருமைச் சொந்தங்கள் உறவுகளை காப்பாற்ற
முன்னேறிச் செல்கையிலே பெருஞ்சோகம் இன்னொன்றாம்!


பட்டாசுக் கிட்டங்கி வெடித்துச் சிதறியதால்
உள்ளிருந்த தொழிலாளர் காப்பாற்ற போனவரும்
செல்லரித்த புத்தகமாய் சிதறிச் செத்தொழிந்தார்!
அம்மவோ! ஆற்றாமை உள்ளமெலாம் எரியுதம்மா
விம்மி அழுவதற்கோ இருபத்து கோடிவிழி?
படித்தவர் படிப்பெதற்கோ காப்பதவர் கடனிலையோ?
அரசும் அறிஞர்களும் இம்மட்டும் செய்ததென?
வறியவரை காப்பதற்கு வகுத்தாண்ட முறைகளென?


வருமுன்னர் காவாதான் கதைகள் அறியேமோ ?
எண்ணிக்கை சொல்வதெலாம் உண்மை எனலாமோ?
உளர்-இலர் மெய்க்கதைகள் கணக்கும் சரிதானோ ?
உழைத்துப் பிழைக்கின்ற தமிழ்மக்கள் கதிஇதுவோ
உலகமெலாம் நீர்-நெருப்பால் அழிவதே நம்விதியோ?
தமிழ்உயிர்க்கு மதிப்பிலையோ வெறும் மயிரோ?
அமிழ்கடல்சூழ் நிலமெங்கும் இப்பேதை போல்யாரோ?
வெறும்தூசு கண்பட்டால் சினந்தெழுஊம் இனமுண்டே!


பெருஞ்சாவு இனமொத்தம் எரித்தொழிப்பு நிகழ்ந்தாலும்
வெறும்பேச்சு கடுதாசி கால்நக்க வடக்கேகும்
தெருவோரத் திருத்தலைமை உணர்வற்ற தலைமுறைகள்
ஆண்டவன் பேர்சொல்லி தப்பிக்கும் ஆளுமைகள்!
ஆளுமையை குறைசொல்லும் முன்னாள் ஆண்டவர்கள்
வேலைமட்டும் நடக்காமல் வீணாய்நாம் போனவராம்!
ஈழம் என்றாலும் இடிந்தகரை என்றாலும்
தமிழன்தான் புலம் பெயர்ந்து சாகின்றான்!


உலகெங்கும் உதைவாங்கி உளம்நோகவோ-தமிழன்!
தலையொன்று சரிஇருந்தால் யாவும் கிடைத்திருக்கும்!
விலைபோன கதையால்தான் வில்லங்கம் வந்ததம்மா!
பின்னொருநாள் நம்நிலத்தில் நன்மை பெருகுமெனும்
விண்மீன்கள் தென்படலை உண்மை ஒழிந்ததம்மா!
ஊரடித்து உலையிலிடும் உன்மத்தம் வளருதிங்கு!
சாதியினால் சமயத்தால் பிட்டுவைத்தக் கட்சிகளால்
திரையுலக மாயை யினால் தீமை நிலைத்ததம்மா!


இலஞ்சப் பேய்களினால் இரக்கமற்ற இராட்சதரால்
பொய்யையே விதைக்கின்ற அரசப் புன்மையரால்
ஆள்பவர்க்கு அடிவருடும் உயர்ந்த பதவியரால்
ஏழை படும்பாடு எள்ளளவும் உணராமல்
உள்ளவர்கள் படித்தவர்கள் நாட்டை நடத்துகிறார்!
வெட்கப்பட வேண்டும் வெறும்சின்ன தேசங்கள்
ஒற்றுமையால் தியாகத்தால் ஓங்கி வளர்ந்ததம்மா
இவர்மட்டும் தேய்கின்றார் நாடிலி ஆனாரே!


இனிஊழிஒன்று வேண்டுகிறேன் வேண்டுகிறேன்யானே!
தமிழ்ச்சங்கம் அழிந்ததுபோல் ஊரழிக அழிக !
இங்கு ஆழிசூழ் நிலமெல்லாம் தீப்பற்றி எரிக!
நிலம்பிளந்து மனிதமெலாம் மண்ணுக்குள் மறைக!
பொய்மை பொசுங்கிட புதுக்குலம் தோன்றுக!
முதுகுடி ஒன்றது முடிவதும் நன்றாம்!
தனியொரு தமிழர்க்கு வாழ்விலைஎன்றால்
தரணியம் எதற்கோ மொத்தமும் மறைக!


-யோஜென் பால்கி
www.yozenmind.com

No comments:

Post a Comment